23 January 2012

கோமாளிப் போராளிகள்!

போலியான கொண்டாடங்கள் முடிந்து, உண்மையான புது வருடம் தொடங்கி, ஒரு மாதம் ஆகப் போகின்றது. வருடப்பிறப்பா இல்லை ‘சாதாரண’ப் பொங்கல்தானா என்ற சர்ச்சையும் தற்காலிக விடிப்பெடுத்திருக்கும்.

ஒவ்வொரு புது வருடம் ஆரம்பிக்கும் போதும், தவறாமல் அதனுடன் சேர்ந்து ஆரம்பிப்பவை 'இன்கம்டாக்ஸ் இம்சைகள்'. நம்மாட்கள் போலி அக்ரிமெண்ட்களையும், போலி மெடிக்கல் பில்களையும் இலஞ்சம் கொடுத்து, இந்நேரம் சேகரிக்கத் தொடங்கியிருப்பார்கள்.அப்படிச் சேகரிப்போருள் பலர், அலுவலக் 'அவுட்லுக் மெயிலில்', அன்னா ஹசாரேவை ஆதரித்து மெயில் ஃபார்வெர்ட் செய்து், ஊழலுக்கெதிராக, 'மிஸ்டு கால்' கொடுக்கச் சொல்லி, மன்றாடும் கோமாளிப் போராளிகளும் அடங்குவர் .

அலுவலக நண்பரொருவர் அன்னா ஹசாரேவின் அதி தீவிர ஆதரவாளர். அவரும் இம்மாதிரியான செயல்களில், மிக மும்முரமாக இருப்பதுதான் செம்ம காமெடி! பொறுக்க முடியாமல், அவரிடம் கேட்டே விட்டேன். அவர் சொன்ன பதிலென்ன தெரியுமா..? "யாரோ, ஆஸ்திரேலியப் பணக்காரராம்.அவர் இந்திய அரசாங்கத்துக்கு எவ்வளவோ கோடிகள் ஏழை மக்களுக்கென கொடுத்தாராம்; ஆனால், அதில் இன்று வரை ஒரு பைசா கூட இந்திய அரசு செலவழிக்கவே இல்லையாம். அப்பறம் நான் எதுக்கு அரசுக்கு வரி கட்டணும்..?! எனக்கு விருப்பமில்லை" என்றார். சுற்றிச் சுற்றி மறுபடியும் அதே பல்லவி! "சுவிஸ்ஸில் உறைந்து கிடக்கும் இந்தியக் கருப்புப் பணத்தை மீட்டு வந்து விட்டால், இருக்கும் 130 கோடி மக்களுக்கும் ஒரு இலட்சம் இனாமாகக் கொடுக்கலாம். தெரியுமோ!" என்றார். நான் பதிலுக்கு, "முயற்சியைக் கைவிட்றாதீங்க பாஸ்! முயன்றால், முடியாதது எதுவுமேயில்மை.." என்று ஆறுதல் கூறிவிட்டு வந்தேன். மனப்பால் குடிப்பவர்களுக்கு வேறென்ன பதில் சொல்ல முடியும்..?

மெத்தபடித்தோர் உட்பட, தாம் என்ன செய்கிறோமென தெரிந்தே, இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுவதுதான் கடும் கண்டனத்துக்குரியது. சில மருத்துவர்களும் இவர்களுக்கு உடந்தை! "என்னிடம் தான் இந்த அன்பர் இவ்வளவு செலவு செய்து, மருத்துவம் பார்த்தார்" என்று தங்கள் அக்மார்க் கோழிக் கிறுக்கல் கையெழுத்தில் எழுதி, கூசாமல், 'ரெவின்யூ ஸ்டாம்ப்' மேல் கையெழுத்துப் போட்டுத் தருகிறார்கள். இலவசச் சேவையா இது..? என்றெல்லாம் அசட்டுத்தனமாகக் கேள்வி கேட்காதீர்கள். நீங்கள் கேட்கும், தொகைக்கு இரசீது எழுதித் தர, அந்தத் தொகையில் நான்கு அல்லது ஐந்து சதவீதம் கமிஷன். நாம் நேர்மையாக சம்பாதிக்கும் காசை, நமக்குச் சம்பந்தமில்லாத ஒருவன், உடல்வலிக்காமல் எங்கோ அமர்ந்திருப்பவன் சாப்பிடலாம். ஆனால், நம்மை ஆளும் அரசுக்கு எக்காரணம் கொண்டும் பணம் சென்று விடக் கூடாது என்ற புரிதல் எவ்வகையில் சரி..? என்று தெரியவில்லை.

ஒவ்வொரு முறையும் பால், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏறும் போதெல்லாம், நம் இரத்த அழுத்தம் ஏறும். கோபம் வரும்! ஆனால், நம் வருமானத்திற்கேற்ற, சரியான வரி கட்ட மாட்டோம். கேட்டால், அரசு எனக்கு செய்தது என்ற சப்பைக் கட்டு காரணங்கள். என்ன விதமான மனநிலை இது! தனிமனிதர்கள் செய்யும் ஒவ்வொரு தவறும், நாளை ஒட்டுமொத்த சமூகத்தையுமல்லவா பாதிக்கிறது. ஒன்றுக்கும் உதவாத அரசு என்றாலும், மக்கள் செலுத்தும் வரியை வைத்து, விலைவாசியை ஓரளவாவது கட்டுக்குள் வைத்துக் கொள்ள உதவும். அவ்வளவு ஏன்..? குறைந்த பட்சம், நம் வேலையைச் சரியாகச் செய்தோம் என்ற மனதிருப்தியாவது ஏற்படுமே!

அரசு கொடுக்கும் இலவச (விலையில்லா) வேட்டி-சேலை போன்றவற்றை, வாங்கி நாற்பது, ஐம்பது ரூபாய்க்கு விற்பது, ரேஷனில் மண்ணெண்ணெய் வாங்கி, அதிக விலைக்கு விற்பது முதலிய 'பாமரத்தனமான ஊழல்களை'க் கண்டு பொங்குவோர்களும் இதே 'படித்தோர்' பட்டியலில் இருப்போர்தான். அவ்வளவு ஏன்..? ஹசாரே-வின் கோஷ்டியில் இருக்கும், கிரண் பேடி கூட இப்படியொரு சில்லறைத்தனமான ஊழலைச் (விமான 'பிஸ்னஸ்' வகுப்புப் பயணச் சீட்டுக்குப் பணம் வாங்கிக் கொண்டு, 'எகனாமிக்' வகுப்பில் சென்றது ) செய்ததற்காகத்தானே விமர்சிக்கப்பட்டார். அப்போதும், பெருவாரியான விமர்சனங்களை, பேடியை நோக்கி முன் வைத்ததும் இந்தக் கோமாளிப் போராளிகள்தாம்.

ஊழலுக்காக உண்ணாவிரதமெல்லாம் இருக்க வேண்டாம்! அவரவர் துருத்தியை ஒழுங்காக ஊதினாலே போதும் என்பது என் துணிபு. ஊழலை எதிர்த்து, புரட்சி செய்யும் வேலைகளை எல்லாம் கல்யாண் ஜுவல்லர்ஸ் முதலான, 'கண்ணியமான' நிறுவனங்கள், 'கனமான' பிரபு மாதிரியானவர்களை வைத்துச் செய்து கொள்வார்கள். மற்றபடி, மேற்குறிப்பிட்ட கணவான்களைத் திருந்தவெல்லாம் சொல்லவில்லை. பிறகெப்படி நமக்குப் பொழுது போகும்..? எனக்கு இப்போதிருக்கும் கவலையெல்லாம், கணவான் என்ற சொல்லுக்கு, ரெண்டு சுழி 'ன'வா..இல்லை...மூனு சுழி 'ண' வா என்பதுதான்!

-♠ராஜூ♠

13 January 2012

விஜய் as a நண்பன்!

தன் பிரம்மாண்டமான, எந்திரனுக்குப் பிறகு மிக ரிலாக்ஸாக ஒரு படம் செய்ய வேண்டுமென ஷங்கர் நினைத்திருக்கக் கூடும். அதனால்தான், தன்னுடைய வசீகரன், புகழேந்தி, சந்திர போஸ், சேதுபதிகளை விட்டுவிட்டு, பஞ்சவன், சேவற்கொடி,விருமாண்டி,பாசப்புகழ் என ’காமிக்ஸ்த்தனமான’ கதைகளைக் கொண்டு, களம் இறங்கியிருக்கிறார். 3 இடியட்ஸ் வலியுறுத்தும் மெசேஜூக்கு புதியவரல்ல ஷங்கர். ஏற்கனவே, பாய்ஸ் படத்தில், சுஜாதாவுடன் சேர்ந்து அதைத் தொட்டு சுட்டுக் கொண்டவர்தான்! ஆனால், இந்தப் படத்தில் சுஜாதாவுக்குப் பதிலாக மதன் கார்க்கி. ஆம்! சுஜாதாவுடன் கை கோர்த்த பின்,அவர் முற்றிலும் இல்லாத,ஷங்கரின் முதல் படம் நண்பன்.

படம் எப்படியிருக்கிறது..? எனக் கேட்டால், ஒரு வேற்று மொழிப் படத்தை ,ஜெயம் ராஜாவும் SA ராஜ்குமாரும் சேர்ந்து ரீமேக்கினால் எப்படியிருக்குமோ அப்படியிருக்கிறது. காட்சிக்குக் காட்சி அப்படியே! கரீனா, ஹெல்மெட் போட்டாளா..? இலியானாவுக்கு ஒரு ஹெல்மெட் ஆர்டர் செய். ’சைலன்ஸர்’ கேரக்டர் கோட் போட்டால், சத்யனுக்கும் ஒன்னு. பரமஹம்ஸா-வின் ’கேமரா டோன்’ உட்பட எல்லாமே, ஒரு ’வடக்கத்தி’ உணர்வைத் தருவது, ஆரம்பத்தில் கொஞ்சம் கடுப்படித்தாலும், திரைக்கதை சுவாரசியத்தில் பழகிப் போகிறது. பாடல்களைப் படமாக்கிவதில் எப்பவுமே ஷங்கர்,ஸ்பெஷல். அவ்வகையில் பாடல்களில் மட்டும் ‘ஷங்கர்த்தனம்’ தெரிகிறது. ஹாரீஸ்தான் பாவம்.பின்னணி இசை,ம்ஹூம்!

படத்தின் மிகப் பெரிய பலமென்று, வசனங்களைச் சொல்லலாம். ஸ்பேஸில் பென்சில், Induction Motor – டுர்ர்ர்ர், நீல் ஆம்ஸ்ட்ராங்கின் ரெண்டாவுது கால் போன்ற ஃபார்வர்டு எஸ்ஸெம்மெஸ் வசனங்களைத் தவிர்த்து, நன்றாகவே இருக்கின்றது. வசனங்களை கார்க்கியும் ஷங்கரும் பங்கிட்டுக் கொண்டுள்ளனரென தெரிகிறது. ஷங்கரின் பாத்திரத் தேர்வுகள்,அருமை!
3 இடியட்ஸில் நடித்தவர்களின் முகங்களுக்கு இணையாகத் தேடிப் பிடித்திருக்கின்றார். அதனாலோ என்னவோ,படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளம். இருந்தாலும் சத்யனும் சத்யராஜும் கலக்கியிருக்கிறார்கள். சத்யராஜ் தாண்டவமாடியிருக்கிறார். சிறு தயாரிப்பாளர்கள் அவரின் கதவை தைரியமாகத் தட்டலாம். பாவம்.டப்பிங் பேசும் போதுதான் ‘கஸ்தபட்டிருப்பார்’.சத்யன் ஆங்காங்கே, மிகையாகத் தோன்றினாலும் அசால்ட்டான நடிப்புக்காகப் பாரட்டலாம்.

இலியானா, இல்லவே இல்லண்ணா! விஜய் எப்படி இவரிடம், ’விட்டத்தின் மட்டம்’ படித்தாரென யோசனை வந்தது.காரணம், படிப்பதற்கான சிலபஸே சுத்தமாக இல்லை பாஸ்.

காவலன் படம் வந்த போது, ஹீரோயிஸமே இல்லாத விஜய் படம் என அவருடைய ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தார்கள். ஆனால், இதுதான் உண்மையில் ஹீரோயிஸம் இல்லாத ஹீரோ (விஜய்) படம்! நடிக்கவே தேவையில்லாமல், மிக கூலாக இருக்கும் கேரக்டர் என்பதாலோ என்னவோ, விஜய் கலக்கியிருக்கிறார். சச்சின் படத்தில் வரும் அதே, குறும்பான பார்வைக்காக பாராட்டலாம். ஜீவா, நடிப்பில் இப்பவே பின்னி எடுக்கிறார். அடுத்து மிஷ்கின் படமாம்! எதிர்பார்க்கலாம். ஸ்ரீகாந்த் Not Bad! அப்பாவிடம் கெஞ்சும் காட்சிகளுக்காக பாராட்டலாம். இவை தவிர ஸ்ரீகாந்தின் அப்பாவாக வரும் நவீன் என்பவர் நன்றாக நடித்திருந்தார்.

ஷங்கர் படம் என்பதால்தான். ஜீவாவின் கும்பத்தையும் , அக்காவையும் கருப்பாகக் காட்டியிருக்கின்றார். இந்த ஷங்கர் எப்பவுமே இப்படித்தான் என கொலைவெறியோடு குறியீடு தேடுவோருக்கு, ‘ஹிந்தியிலும் அப்படித்தான் இருந்தது பாஸ்’.

எல்லாம் சரி! All is Well தான்! ஏதோ ஒன்று குறையுதே, அது என்ன..? என்று படம் நெடுக தேட வைக்கும் ஒரு விஷயம் இருந்து கொண்டே இருக்கிறது. இறுதிக் காட்சியில், சத்யன் உதிர்க்கும் ஒரே ஒரு வார்த்தையில் அந்தத் தேடல் முடிவுக்கு வருகிறது. அவ்வார்த்தை, ‘ஃபேமிலியஸ்தன்’. அது சுஜாதா!

-♠ராஜூ♠